அத்தனை குதிரைகளும்
விடுப்பில் இருந்தாலும்
காலத் தேர்
ஓடிக்கொண்டே தான் இருக்கிறது.
என் வீட்டின்
மெழுகிய திண்ணை
சிமின்ட் பூசப்பட்டு,
இப்போது
கம்பி வேலைப்பாடுகளுக்குள்
கைதியாய்,
பின்பக்கம் இருந்த
சாம்பல் கூடும்,
சருகுக் குழியும்
ஸ்டவ் மேடைகளுக்கு கீழ் சமாதியாய்,
ஓட்டை வெறித்துப் பார்க்கும்
என்
படுக்கையறைக் கட்டில்
இப்போது
பாதி வழியில்
காங்கிரீட் தட்டினால்
தடுத்து நிறுத்தப்படுகிறது,
அந்த
நடு அறையின்
பலகை அலமாரி தந்த
வேப்பெண்ணை வாசம்
இப்போதெல்லாம் வீசவில்லை
விட்டில்கள்
தட்டி விளையாடும்
புட்டிகள்,
கைபொத்திக் காப்பாற்றும்
மண்ணெண்ணை விளக்கு,
படுக்கையாய்
அப்பா உபயோகித்த
மரப் பத்தாயம்,
எதுவும் இந்த
மெத்தை உலகில் மீதமில்லை.
எல்லாம்
மாறினாலும்,
இப்போதும் மாறாமல்
அப்படியே இருக்கிறது.
புகைப்படத்தில் சிரிக்கும்
தாத்தாவின்
வெற்றிலைப் புன்னகை.
Wednesday, April 14, 2010
மருதாணிக் கனவுகள்
Posted by MuthuRaj on 6:20 AM

